Jan 26, 2008

அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்

அல்லாஹ் கூறுகிறான்: -

"(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்" (அல் குர்ஆன் 7:205)

இந்த வசனத்தில் வசனம் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்: -

மேற்கண்ட வசனத்தில், திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேணடும் என இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் சூஃபியாக்கள் திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர்.

இதில் வேதனையான விசயம் என்னவென்றால் சூபியாக்கள் கொள்கையைப் பற்றித் தெரியாதவர்கள் கூட அறியாமையினால் தாங்களும் இறைவனை திக்ரு செய்வதாக எண்ணிக்கொண்டு இதுபோன்ற மஜ்லிஸ்களில் கலந்து கொள்கின்றனர். காரணம் என்னவெனில் அவர்கள் ஊரில் உள்ள பெரும்பாண்மையானவர்கள் இந்த மாதிரியான பித்அத்களைச் செய்வதினால் அவர்களும் இதையும் மார்க்கம் என்று கருதுகின்றனர். உதாரணமாக, இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் கூட சிறுவயதில் சூஃபியா கொள்கைகளைப் பற்றிய அறியாமையினால், எங்கள் ஊரில் பெரும்பாலோர் செய்வது போன்று, "ஹல்கா" என்ற பெயருடைய திக்ரு மஜ்லிஸ்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ் என் போன்றவர்கள் அறியாமையினால் செய்த பாவங்களை மன்னித்தருள வேண்டும் என இறைஞ்சுகிறோம்.

இவர்கள் நபிவழிக்கு மாற்றமான பலவகையான திக்ரு முறைகளை செய்கிறார்கள். அவைகளில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரபலமானவை 'ஷாதுலிய்யா தரீக்கா' மற்றும் 'காதிரிய்யா தரீக்கா' என்ற பிரிவுகளைச் சேர்ந்தவைகளாகும். இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ரு முறைகளில் மாாரக்கத்திற்கு முரணான ஏராளமான செயல்களைச் செய்கின்றனர். இந்த வகை திக்ரு முறைகளில் ஷாதுலிய்யா தரீக்காவில் இவர்கள் செய்யக்கூடிய திக்ரு முறையைப் பற்றி சற்று பார்ப்போம்.

ஷாதுலிய்யா தரிக்காவின் ஹல்கா (திக்ரு?) முறை: -

இதில் முதலில் இவர்கள் வட்டமாக அமர்ந்துக் கொள்கின்றனர். பின்னர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்ற திக்ரை அந்த மஜ்லிஸின் தலைவர் கூறி அரம்பம் செய்ய அங்கு கூடியிருப்போர் அனைவரும் உரத்த குரலில் அதை கூறுகின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை அவர்கள் கூறி முடித்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒவ்வொருவரும் தமது பக்கவாட்டில் உள்ளவரிடம் கையைக் கோர்த்துக் கொண்டு, தத்தமது உடல்களை அசைத்தவராக 'அல்லாஹ்' 'அல்லாஹ்' என கூறுகின்றனர். பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு அரபிப் பாடல்களை 'பைத்து' என்று பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது அன்றைய காலக்கட்டத்தில் வெளியாகியிருக்கும் சினிமாப் பாடலின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்துக் கொண்டு பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது மற்றவர்கள் 'அஹ்' என்றும் 'ஆஹ்' என்றும் அந்த சினிமாப் பாடலின் இராகத்தில் அமைந்த அந்த அரபி பாடலுக்கு ஏற்றவாறு தமது உடலை அசைக்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால் அவ்வாறு ஆடும் போது 'சுதி' (அவர்கள் பாஷையில் 'ஜதப்' என்கின்றனர்) ஏற்றுவதற்காக சிலர் வேகமாக கையைத் தட்டுகின்றனர். பின்னர் அவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரும் உரத்தகுரலில் 'யா லத்திஃப்' என்று கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு சில ஆயத்துக்களை ஓத அக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பாத்திஹா ஒதி அந்த திக்ரு? முறையை நிறைவு செய்கிறார்.

அல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காட்டித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் 'அல்லாஹ்' என்ற அழகிய திருநாமத்தை கூட 'ஆஹ்' என்றும் 'அஹ்' என்றும், 'ஹு' என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதயையே கேலிக் கூத்தாக்குகின்றனர். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

"அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்" அல்குர்ஆன் (7:180)

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கத்து நிராகரிப்பாளர்களின் செயலான கைத் தட்டுதலை வணக்கமாக கருதுபவர்களைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

'அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) 'நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள' (என்று)." (அல் குர்அன் 8:35)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:

"மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்க வில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்" அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி) , ஆதாரம்: புகாரி

இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ருமுறைகளை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தரவில்லை. மாறாக அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட மார்க்கத்தில் இவ்வாறு புதிய அமல்களை உருவாக்குபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -

'நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’

"(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்' ஆதாரம்: அஹ்மத்

அல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விட்டு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

பித்அத் பற்றிய மேலதிக விபரங்களுக்கு "பித்அத் என்றால் என்ன?" என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

Jan 25, 2008

ஈசா நபி (அலை) அவர்களுக்கும், இறைவனுக்கும் மறுமையில் நடக்க இருக்கும் உரையாடல்

"இன்னும் 'மர்யமுடைய மகன் ஈஸாவே 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர் 'நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார். (அல் குஆன் 5:116)

'நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) 'என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)" (அல் குஆன் 5:117)

சூரத்துல் மாயிதாவில் இடம் பெறும் இந்த வசனங்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பல உள்ளன. அவைகளில் முக்கியமானவைகள்:-
- ஈஸா நபி (அலை) அவர்கள் தம்மையும், தம்முடைய தாயாரைரையும் வணங்குமாறு தம்மைப் பின்பற்றியவர்களிடம் கூறவில்லை.
- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் அறிந்தவண்ணம் இருக்கிறான்
- மனதில் உள்ளதை அறிபவன் அல்லாஹ் மட்டுமே.
- இறைவனுடைய நாட்டத்தை யாரும் அறிந்துக் கொள்ள முடியாது
- மறைவானவற்றை அறிபவன் அல்லாஹ் மட்டுமே
- அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும்
- ஈஸா நபி (அலை) அவர்கள் இப்பூவுலகில் இருந்தவரை அவர்களைப் பின்பற்றியவர்கள் நபியவர்களின் கண்காணிப்பில் இருந்தனர்
- ஈஸா நபி (அலை) அவர்களை அல்லாஹ் உயர்த்திக் கொண்ட பிறகு, ஈஸா நபி (அலை) அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள் என்று ஈஸா நபி (அலை) அவர்களுக்குத் தெரியாது. அதாவது கிறிஸ்துவர்கள் தம்மையும், தம் தாயாரையும் வணங்குவது கூட ஈஸா நபி (அலை) அவர்களுக்குத் தெரியாது.

ஒரு மிகச்சிறந்த நபிக்கே அதுவும் அவர் மரணமடையாமல் அல்லாஹ்வின் பால் உயாத்தப்பட்டுள்ளவருக்கே அவரைப் பின்பற்றியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது என அல்லாஹ் கூறியிருக்கும் போது இறைவனை விடுத்து இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் நமது சகோதர, சகோதரிகளின் பிரார்த்தனைகளையும், கோரிக்கைகளையும் அவர்கள் தெரிந்துக் கொள்வதோடு அவற்றை நிறைவேற்றவும் செய்கின்றனர் என்று நம்புவது மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கு எதிரான நம்பிக்கையாகும்.

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!!!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
"மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்" (அல்குர்ஆன் 67:13)

இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் வெளிப்படையாக பேசுவதையும், நம் இதயங்களில் மறைத்து வைத்துள்ள இரகசியங்களையும் அறிவான். இந்தப் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மடடுமே உரியது.

எவரேனும் ஒருவர் மற்றவரின் இதயத்தில் உள்ள இரகசியங்களை அல்லாஹ்வைத்தவிர இறைநேசரோ, அவுலியாவோ, மற்றவர்களோ அறிந்துக் கொள்ள முடியும் என்று நம்பினால் அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் ஆற்றலாகிய இதயங்களில் உள்ள இரகசியத்தை அறியும் தன்மை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதுவதாகும். இதற்கு ஒரு உதாரணம் காண்போம்: -

ஒருவர் மலேசியாவில் இருந்துக் கொண்டு தம் மனதிற்குள், தம்முடைய ஒரு தேவையை நாகூரில் அடக்கமாகியிருக்கும் சாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தந்தால் அந்த அவுலியாவுக்கு காணிக்கை செலுத்துவேன் என்று நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம். இங்கே இவர் இரண்டு விதமான ஷிர்க்கைச் (இணை வைத்தலைச்) செய்தவராகிறார்.

ஒன்று அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேணடிய நேர்ச்சை என்ற வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர மற்றவரிடத்தில் செய்வது
இரண்டாவது மலேசியாவில் இருக்கும் அவருடைய மனதில் உள்ள இரகசியங்களை அல்லது தேவைகளை அல்லாஹ்வுக்கு தெரிவதோடு மட்டுமல்லாமல் நாகூரில் இருக்கும் சாகுல் ஹமீது அவுலியாவுக்கும் தெரிகிறது என்று நம்புவது.
மேற்கண்ட இரண்டு நம்பிக்கைகளுமே இணைவைத்தல் என்னும் ஷிர்க்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்" (அல்குர்ஆன் 4:116)

மேலும் நம் இதயங்களில் உள்ள இரகசியங்களை, (தேவைகளை, எணணங்களை) அறிபவன் அல்லாஹ் மட்டுமே என்று திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும் - 11:5, 11:31, 29:10, 48:18, 67:13, 28:69, 28:69, 2:284, 3:29, 14:38

இணைவைத்தல் என்னும் கொடிய பாவத்தைத் தவிர மற்ற பாவங்களை தான் நாடியவருக்கு மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறியிருப்பதால் நாம் மிகுந்ந எச்சரிக்கையோடு இணைலவத்தலின் சாயல் கூட நம் வாழ்வில் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வெண்டும்.

எனவே நம் இதயங்களின் இரகசியங்களை அறியக்கூடியவனான அல்லாஹ்விடமே நம் தேவைகளைக் கூறி பிராத்திக்க அல்லாஹ் கிருபை செய்வானாகவும்.

Jan 24, 2008

வட்டியின் தீமைகள்

இன்று நம் சமுதாய மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் பெரும்பாவங்களில், தீமைகளில் வட்டியும் ஒன்று. நம்மில் சிலருக்கு வட்டி மட்டுமே குடும்ப வருவாயாக இருக்கும் அளவுக்கு வட்டியை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் தவறாமல் வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துபவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தான் சாப்பிடுகின்றோம் என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்குகின்றனர். வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் அவ்வாறு கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக குர்ஆனிலே எச்சரிக்கின்றான்.

"யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்" (அல் குஆன் 2:275)

மறுமையில் சித்தம் கலங்கிய நிலையில் எழுப்ப வைக்கும் அளவிற்கு மிகக் கொடிய பாவமாகிய வட்டியை வாங்கி அதையே தம் வருமானமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் கூறுவது என்னவென்றால், நாங்கள் செய்த முதலீடு, வட்டியின் மூலம் பெறுகிக் கொண்டே செல்கின்றது, அதனால் எங்களுக்கு தொடர்ந்து இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்கின்றனர்.

அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

"அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குஆன் 2:276)

அல்லாஹ்வினால் பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்தும் என்ன பயன்? வட்டியின் மூலம் பார்ப்பதற்கு (செல்வங்கள்) அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக்குறைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பரக்கத்தையுடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும், நிறைய பலன்களும் கிடைக்கும் அல்லவா? மேலும் வட்டி வாங்குவதை வருமானமாக, தொழிலாகக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்றும், அவர்களுடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

"வட்டியினால் திரட்டப்படும் பொருளையும், அவ்வாறு பொருள் திரட்டுபவனையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். எனவே அப்பொருளின் அபிவிருத்தியைத் தடுத்து அதனை அழித்து விடுகிறான். அவ்வாறே அத்தொழில் புரிவோரின் தர்மத்தையும், ஹஜ்ஜையும், இதர நன்மைகளையும் அவன் ஏற்பதில்லை" அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் வட்டியில் சம்பத்தப்பட்ட அத்தனை பேர்களையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

"வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்" அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது,

"வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி

இரட்டிப்பாகும் என்று நினைத்து வட்டி வாங்காதீர்கள்:-

அல்லாஹ் கூறுகிறான்:-

"ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்" (அல்குஆன் 3:130)

மற்றவர்களின் முதலீடுகளுடன் சேர்த்து வட்டிக்கு விடாதீர்கள்:-

"(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்" (அல்குஆன் 30:39)

எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள்:-

"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்" அல்குஆன் 2:278)

இறைவனின் வட்டியைப் பற்றிய தெளிவான "யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்" என்ற இறைவனின் வசனத்தை (2:275) பற்றி நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்லாஹ் முஸ்லிமான நம்மனைவரின் ஈமானையும் உறதிபடுத்தி, இத்தகைய கொடுமையான பாவத்திலிருந்து மீளச்செய்து மீண்டும் வட்டியின் திமைகளில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும் என பிராத்திப்போம். வல்ல நாயனான அல்லாஹ் அருள் புரிய போதுமானவன். ஆமின்.

Jan 22, 2008

குர்ஆனை பின்பற்ற வேண்டியதன் அவசியம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம்.

அல்லாஹ் தன் திருமறை அத்தியாயம் 2 வசனம் 185 -ல் கூறுகிறான்: -

"ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும், (சத்திய, அசத்தியத்தைப்) பிரித்துக்காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது"

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 4 வசனம் 58 -ல் கூறுகிறான்: -
"அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்."

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 -ல் கூறுகிறான்: -

"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்."

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 41 வசனங்கள் 2-4 -ல் கூறுகிறான்: -

"அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர் அவர்கள் செவியேற்பதும் இல்லை."

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 18 வசனங்கள் 1-3 -ல் கூறுகிறான்: -

"தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்."

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 18 வசனங்கள் 1-3 -ல் கூறுகிறான்: -

"(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்"

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறை வசனங்களில் இருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்னவெனில், குர்ஆன்:-

- மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும்
- நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும்
- சத்திய, அசத்தியத்தைப் பிரித்துக்காட்டக் கூடியதாகவும்
- அறிந்து நல்லுபதேசம் அளிப்பதாகவும்
- ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும்
- நேர்வழி காட்டியதாகவும்
- ரஹ்மத்தாகவும்
- முஸ்லிம்களுக்கு நன்மாராயம் கூறுவதாகவும்
- அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாகவும்
- அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும்
- இது கீர்த்தியளிக்கும் உபதேசமாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் "(இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள"் என அல்லாஹ் கூறுகிறான். எனவே சகோதர சகோதரிகளே, நாம் திருக்குர்ஆனை ஓதும் போது சடங்கு சம்பிரதாயங்களுக்காக ஓதிக்கொண்டிருக்காமல் அதனுடைய பொருள் அறிந்து ஓதுவதற்கு முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் திருமறை நமக்கு கற்றுத்தரும் வழிமுறைகளையும் உபதேசங்களையும் நாம் பின்பற்றி நடக்க முடியும்.

நபி (ஸல்} அவர்கள் கூறினார்கள்: -

'குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுங்கள்; அது மறுமையில் பரிந்துரை செய்யும்"

"உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஓன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்), மற்றொன்று என்னுடைய வழிமுறை (சுன்னத்-ஹதீஸ்). இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீகள்".

மேற்கண்ட ஹதீஸின் இறுதியில் நபி (ஸல்) அவாகள் கூறியதை நாம் சற்று சிந்தித்துப் பாக்க வேண்டும். "இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள்" என்று கூறியிருக்கிறாகள். இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகிய இவ்விரண்டையும் தவிர்த்து மற்றவைகளையெல்லாம் பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றோம். திருக்குர்ஆனை சடங்கு சம்பிரதாயங்களுக்காவும், ஹத்தம், பாத்திஹா ஓதுவதற்காகவும் தான் பயன்படுத்துகிறமே தவிர குர்ஆன் என்பது நாம் எப்படி வாழவேண்டும் என்று அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கிய சட்டதிட்டங்கள் என்பதை உணர்வதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமறை வசனங்களில் மட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான வசனங்களில் அல்லாஹ்வின் திருமறையை பின்பற்றி வாழவேண்டும் என வலியுறுத்துகிறான்.

- அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர் - (39:9)
- கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழிவழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள் - (34:6)
- குர்ஆனை பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நன்பனாக்கப்படுவான் - (43:36-39)
- குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் - (42:52)
- குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது - (45:20)
- குர்ஆன் நம்பிக்கையாளாகளுக்கு நேர்வழிவழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது - (45:20 , 27:77)
- குர்ஆன் நேர்வழி காட்டுகிறது - (17:9 , 46:30 , 45:11)
- குர்ஆன் முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது - (27:2)
- குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது - (41:4 , 44:3)
- குர்ஆன் அகப்பார்வை அளிக்கிறது - (50:8)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசம் செய்கிறது - (50:8 , 81:27-28)
- குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது - (50:37)
- குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது - (41:3)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும் - (68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11-12)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது - (86:13-14)
- குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு வழிகாட்டியும், மருந்துமாகும் - (41:44)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது: வீனான வார்த்தைகளைக் கொண்டது இல்லை - (86:13-14)
- குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை - (2:2)
- பயபக்தியுடையோருக்கு குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் - (2:2)
- தெளிவான வசனங்களை இறக்கியிருக்கின்றோம்: பாவிகளைத் தவிர வேறெவரும் அவற்றை நிராகரிக்க மாட்டார்கள் - (2:99)
- அல்லாஹ் இறக்கியருளியதின் பால் வாருங்கள் என்று கூறப்பட்டால், எங்கள் தந்தையரைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறர்ாகள் - (5:104)
- குர்ஆனைப் பின்பற்றுங்கள் என்று கூறினால் எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள் - (2:170)
- எந்தவித ஆதாரமுமின்றி அல்லாஹ்வின் வசனங்களைப்பற்றித் தர்க்கம் செய்யக்கூடாது - (40:35 , 40:56 , 40:69 , 42:35)

எனவே சகோதர, சகோதாகளே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வலியுறுத்துவது போல நம் வாழ்க்கை நெறிமுறைகளை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புவானாகவும். ஆமீன்.

ஒன்றிணையும் சூரியனும் சந்திரனும்

சந்திரன் மற்றும் பூமியின் ஆயுள் காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒரு கால கட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றினைந்து விடும் என்று கூறுகிறார்கள். இது பற்றிக் குர்ஆன் ஏதாவது கூறுகிறதா என்று பார்ப்போம்: -

இக்கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய விண்வெளி ஆய்வாளர்கள் கூறுவதைச் சற்று பார்ப்போம்.

சூரியனின் தன்மைகள்:- ஹைட்ரஜன் பெருமளவும் ஹீலியம் ஓரளவும் அடங்கிய ஒரு மிகப்பொய நெருப்புப் பந்து தான் சூரியன். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள், மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் மொத்த எடையில் 98 சதவிகிதம் சூரியனின் எடையாகும். பூமியின் எடையை விட, சூரியனின் எடை 3, 30,000 மடங்கு அதிகமாகும். பூமியின் அளவை (Size) விட 109 மடங்கு பெரிதாகும்.

சூரியனின் வெளிப்புறத்தில் எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் சுவாலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையிலும் பரவிச் செல்கின்றது. இவ்வாறு எரிந்துக் கொண்டிருப்பதற்கு காரணம், சூரியனின் உட்புறத்தில் (Core) நிகழ்ந்துக் கொண்டிருக்கும் நியூக்ளியர் ரியாக்ஸன் (Neuclear Reaction) என்ற செயலின் முலம் ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. இதன் காரணமாக ஏராளமான வெப்பம் உருவாகிறது.

சூரியனின் உட்புறம் ஓர் அணு உலையைப் போல் இருக்கிறது. இதனின் வெப்பம் 15 மில்லியன் (1-1/2 கோடி) டிகி சென்டிகிரேட் ஆகும். ஒரு வினாடிக்கு 50,00,000 (5 மில்லியன்) டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் நியூக்ளியர் ரியாக்ஸன் என்ற செயலின் முலம் எரிந்து ஹீலியம் அணுக்களாக மாறுவதாகவும், கணக்கிட்டுள்ளனர். ஹைட்ரஜன் என்ற சூரியனின் எரிபொருள் இன்னும் 5 பில்லியன் (5 Billion) ஆண்டுகளுக்கு தேவையான அளவு அதில் இருப்பதாகக் கணித்துக் கூறுகின்றனர்.

இவ்வாறு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறும் போது எராளமான மின் காந்த வெப்பக் கதிர்களை (Electromagnetic Radiation) உருவாக்குகிறது. இந்த வெப்பக் கதிர்கள் சூரியனின் வெளிப்புறத்தை நோக்கிச் செல்கிறது. அதனால் சூரியனின் வெளிப்புறம் பல ஆயிரகக்கணக்காண கிலோ மீட்டா நீளமுடையய தீச் சுவாலைகளுடன் எரிந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியனின் மத்தியில் உற்பத்தியான இந்த வெப்பக் கதிர்களே, சூரியன் மிக மிக பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும் சூரியக் குடும்பத்தில், சூரியனின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அதனதன் பாதைகளில் சுற்றிவரும் கோள்களையும், சந்திரன்களையும், ஆஸ்ராயிட்ஸ் (Astroids) எனப்படும் விண்கற்களையும் வெப்பமைடயச் செய்வதற்கு இந்த வெப்பக் கதிர்களே காரணமாக இருக்கின்றன. இந்தக் கதிகளின் முலமே சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பிரகாசமாக இருக்கின்றன.

சந்திரனின் தன்மைகள்:- சூரியனிலிருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கும் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பூமியின் துணைக்கோளாகும். பூமியின் எடையில் 1.2 சதவிகிதம் எடையே இருக்கும் சந்திரன் பூமியை விட மிகச்சிறியதாகும். இதன் பகல் நேர வெப்பநிலை 107 டிகி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் பாலைவனப் பகுதியின் சராசரி பகல் நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு அதிகமாகும். சந்திரனின் இரவு நேர வெப்பநிலை 153 டிகி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் துருவப் பகுதியின் இரவு நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு குறைவாகும்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவைகளின் முடிவு:- இந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் முடிவு உண்டா என்று இவற்றின் தோற்றம் குறித்து ஆராய்ந்து அறிந்த நவீன விண்வெளி ஆய்வாளர்களைக் கேட்போமேயானால் அவாகள் ஆம் அவற்றுக்கும் அழிவு உண்டு என்றே கூறுகிறாகள். நமது சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி நட்சத்திரமண்டலத்தை (Milkyway galaxy) ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் அவற்றில் ஆயிரக்கணக்கான இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதகை கண்டனர். இது போல மற்ற விண்ணடுக்குகளிலும் (Galaxies) ஆயிரக்கணக்கில் இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதைக் கண்டனர். இந்த டெட் ஸ்டார்களை அவைகள் எப்படி இறந்திருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒவ்வொரு நட்சத்திரமும் எப்படி இறக்கின்றன என்ற கோட்பாட்டை (Theory) வரையறுத்தனர். ராயல் கிரின்விச் அப்ஸர்வேட்டர் என்ற விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசியர் சர். மார்டின் ரீஸ் என்பவர் கூறுகிறார்:- பொதுவாக நட்சத்திரங்கள் இறக்கும் போது அவைகளில் பெரும்பாலானவைகள் வெடித்துச் சிதறி அதன் மூலம் மிகப்பொய வாயுக்களடங்கிய நெபுலாக்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த நெபுலாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இப்பேரண்டத்தில் நிலைத்திருக்கும். இந்த நெபுலாக்களிலிலிருந்தே புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றது. அளவில் மிகப்பெரிய நட்சத்திரங்களே (Big Stars) இவ்வாறு வெடித்துச் சதறி சுப்பர் நோவா என்பதைத் தோற்றுவிக்கிறது. ஆனால் சூரியன் அளவில் மிகச் சிறியது. இதன் இறப்பு என்பது ஈப்பாற்றலினால் ஏற்படக்கூடியது என்று கூறினார்.

அவர்களுடைய இக்கோட்பாட்டின்படி, 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இந்த சூரியன் தற்போது தான் நடுத்தர வயதை அடைந்துள்ளது. தற்போது சூரியன், 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட மிகத் தீவிரமாக (more violent than before) இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், எதிகாலத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கின்றனா. இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் அதி தீவிர வெப்பக்கதிகளினால் இந்த பூமியில் உள்ள கடல் நீர் அனைத்தும் ஆவியாகி விடும் என்கின்றனர். சூரியனின் மத்தியிலுள்ள அதன் எபொருளான ஹைட்ரஜன் வாயுக்கள் தீர்ந்ததும், சூரியனின் முடிவு ஆரம்பமாகின்றது. அப்போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துக் கொண்டே செல்லும். இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு, சூரியனைச் சுற்றி வருகின்ற கோள்களும், சந்திரன்களும், எண்ணற்ற விண்கற்களும் சூரியனுடன் இணைந்து விடும். அதன் பின் ஒரு கட்டத்தில் சூரியன் வெடித்துச் சிதறி பற்பல துண்டுகளாகிவிடும். எஞ்சிய அடாத்தியான பகுதி ஒளியிழந்து வெண்மை நிறமாகக் காட்சியளிக்கும். இதனை ஒயிட் ட்வார்ப் (white dwarf) என்கின்றனர்.

இந்த விஞ்ஞானிகள் கூறக்கூடிய காலக்கணக்குகள் எல்லாம் அவர்களின் கணிப்புகளே. இவைகளின் மீது நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் இன்று ஒரு கோட்பாட்டைக் கூறும் அறிவியலாளாகள் நாளை இன்று கூறியதற்கு நேர்மாற்றமான மற்றொரு கருத்தைக் கூறுவர். இதனால் நாம் அவர்களைக் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் அவர்கள் அறிந்ததைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். சூரியனின் முடிவு எப்போது ஏற்படும் என்பதில் நமது சிந்தனையைச் செலுத்தாமல் (ஏனென்றால் உலக முடிவு நாள் எப்போது ஏற்படும் என்பது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான் {அல் குர்ஆன் 31:34}) அவாகள் கூறும் மற்ற கருத்துக்களை நாம் சிந்திப்போமேயானால் நமக்கு ஆச்சரியமளிக்கக் கூடிய வகையில் இறைவனின் வசனங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதை கூறியிருக்கிறது என்பதை அறிகிறோம். இனி இறைவனின் திருவசனம் இவைபற்றி என்ன கூறுகின்றது என்பதைப் பாப்போம்.

'கியாம நாள் எப்போழுது வரும்?' என்று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி- சந்திரனும் ஒளியும் மங்கி- சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் '(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?' என்று மனிதன் கேட்பான். 'இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!' (என்று கூறப்படும்)' (அல் குர்ஆன் 75:6-11)

1400 ஆண்டுகளுக்கு முன்னால் குர்ஆன் கூறிய கருத்தான சூரியனும், சந்திரனும் ஒன்றிணைந்துவிடும் என்ற உண்மையை நோக்கி இன்றைய விஞ்ஞானம் செல்வதை நாம் உணர்கிறோம்..

முழுமையான ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது.

புனித மரம்!!

நபி (ஸல்) அவர்கள் புனித கஅபாவை தரிசிப்பதற்காக மதினாவிலிருந்து 1400 தோழர்களுடன் ஹிஜ்ரி 6 ம் ஆண்டு துல்கஅதா மாதம் புறப்பட்டு மக்கா செல்லும் வழியில் ஹுதைபிய்யா என்னுமிடத்தில் தங்கினார்கள். போர் செய்யும் எண்ணமில்லாமல் வந்திருந்த முஸ்லிம்களிடம, மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் போர் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில் மக்காவிற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்ற உஸ்மான் (ரலி) அவர்களை மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் கொன்று விட்டதாக முஸ்லிம்களிடையே வதந்தி கிளம்பியது.

இச்செய்தியைக் கேள்விபட்ட நபி (ஸல்) அவர்கள் இனி உஸ்மானின் இரத்தத்திற்குப் பழிவாங்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் அருகிலிருந்த கருவேலமரத்தினடியில் அமர்ந்துக் கொண்டார்கள். இங்கு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் "நாங்கள் இறந்தாலும் இறப்போமே தவிர போரிலிருந்து பின் வாங்க மாட்டோம். குறைஷிகளிடம் உஸ்மானின் இரத்தத்திற்குப் பழி வாங்குவோம்" என்று உறுதிப் பிரமாணம் வாங்கினார்கள். இதற்கு பைஅத்துல் ரிள்வான் என்று பெயர். இந்த பைஅத் வரலாற்றில் சிறப்பு மிக்கதாகும். ஏனென்றால் இந்த பைஅத் முஸ்லிம்களுக்கு இறை நிராகரிப்பாளர்களை பழிவாங்கிட ஒருவிதமான உத்வேகத்தைக் கொடுத்தது. அல்லாஹ்வும் இந்த பைஅத் செய்த பாக்கியவான்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்.

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான். (அல் குர்ஆன் 48:18)

இதற்குப் பின் மக்கத்து இறை நிராகரிப்பாளர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே வரலாற்றில் புகழ்பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டு போர் தவிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையை இறைவன் வெற்றி என்று தன் திருமறையில் கூறுகின்றான்.

புனித மரம் :-

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் ஹஜ்ஜு, உம்ராவுக்கு செல்லும் வழியில் ஹுதைபிய்யாவில் பைஅத்துல் ரிள்வான் நடைபெற்ற இடத்திலிருந்த அந்த மரத்தை புனிதமாகக் கருதலானார்கள். இறைவன் திருமறையில் குறிப்பிட்டிருக்கும் அந்த மரத்தினடியில் தான் நபி (ஸல்) உறுதி பிரமாணம் வாங்கினார்கள் என்றும் அதனால் அம்மரத்திற்குப் புனிதத் தன்மை இருக்கிறது என்றும் அதற்கு கண்ணியமும், மரியாதையும் செலுத்தி, அந்த மரத்தை வலம் வரத் துவங்கினார்கள். இச்செய்தி உமர் (ரலி) அவர்களின் காதுக்கெட்டியதும் மிகவும் ஆத்திரமுற்று இறைவனுக்கு இணைவைக்கும் இச்செயலுக்கு முடிவு கட்டிட எண்ணினார்கள். தம் தோழர்களை அனுப்பி அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார்கள் என்ற செய்தி வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது.

இந்த வரலாற்று நிகழ்ச்சியின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:-

- புனித கஅபாவைத் தவிர வேறெந்தப் பொருளுக்கும் அதாவது மரம், கட்டடம், சமாதி, தர்ஹா இவைகளுக்கு புனித தன்மைகள் இருப்பதாகக் கருதி அவற்றை வலம் வரக்கூடாது
- புனித கஅபாவைத் தவிர மற்றவைகளுக்குப் புனிதத் தன்மை இருப்பதாகவோ அல்லது பிணியை, கஷ்டங்களை நீக்கும் சக்திகள் இருப்பதாகவோ நம்புவது இறைவனுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அந்த சக்திகள் அவற்றுக்கும் உண்டு என்று நம்பி இணைவைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்படமாட்டாத பாவத்தை செய்ததாகிவிடும்.

இன்று நம்முடைய சமுதாயத்தின் கண்களான பெண்கள், குழந்தை பாக்கியம் பெற வேண்டியும் இன்னும் பிற தேவைகளுக்காகவும் ஏர்வாடி போன்ற ஊர்களில் உள்ள தர்ஹாக்களில் இருக்கும் மரத்தில் தொட்டில்களையும் இன்னும் பிற பொருள்களையும் தொங்கவிடுவதைப் பார்க்கிறோம். இவர்கள் மேற்கூறப்பட்ட வரலாற்று நிகழ்சியைக் நினைவில் கொண்டு அதன் மூலம் நாம் பெறும் படிப்பிகைளைப் பற்றி சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் இத்தகைய செயல்கள் செய்வதை விட்டும் நம்மைக் காப்பாற்றி அவனது தூதர் காட்டத்தந்த வழிமுறைகளில் நாம் வாழ அருள்புரிவானாகவும். ஆமின்.

Jan 9, 2008

பித்அத் என்றால் என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும் அல்லது நுழைக்கப்படும் இந்த புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

இன்று நமது இஸ்லாமிய சமுதாயம் இத்தனைக் கூறுகளாக பிரிந்து சிதறுண்டுக் கிடப்பதற்கு மூலக்காரணம் புதிய பித்அத்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வதேயாகும். அல்லாஹ் தனது மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாகக் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் சென்றிருந்த போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்.

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்" (அல் குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:

"...செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்." அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

"நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும" அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

இன்று நமது சமுதாய மக்களிடையே பரவலாகக் காணப்படும் மிக மோசமான பித்அத்கள் சிலவற்றைக் காண்போம்.

இறைவனால் மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் இணைவைத்தல் அடங்கிய மவ்லிது பாடல்களை பக்திப் பரவசத்துடன் நன்மையை நாடி பாடுவது
மீலாது விழா, பிறந்த நாள் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவது
நபி (ஸல்) அவர்களால் புனித நாட்கள் என்று கூறப்படாத நாட்களை புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் நோன்பு நோற்பது. உதாரணங்கள் மிஹ்ராஜ் இரவு மற்றும் பராஅத் இரவு
16 நோன்பு நோற்பது.
திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய திக்ரு (ஹல்கா) செய்வது. இதில் இறைவனை அழைப்பதாகக் கூறிக்கொண்டு இறைவனின் அழகிய திருநாமங்களை திரித்துக் கூறுவதோடு, அவர்கள் புதிதாக வெளிவந்த சினிமாவின் பாடலுக்கேற்ற இசையில் இராகங்களை வடிவமைத்துக் கொண்டு ஆடிப்பாடுகின்றனர். இவ்வாறு செய்வதல் இறந்தவாகளின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கருதி இறந்தவர்களின் 7 ஆம் நாள் மற்றும் வருட பாத்திஹாக்களில் இந்தக் பித்அத்களை நிறைவேற்றுகின்றனர்.
இறந்தவர்களுக்காக 3,7,40 ஆம் நாள் மற்றும் வருடாந்திர பாத்திஹாக்கள் ஓதுவது.
நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்து நாரியா என்ற ஷிர்க் வாத்தைகள் அடங்கியதை 4444 தடவை ஓதுவது
இவைகளைச் செய்யக்கூடிய நமது சகோதர, சகோதரிகள், பின்வரும் காரணங்களையோ அல்லது அவற்றில் சிலவற்றையோ கூறுகிறார்கள்: -

நன்மைகளைத்தானே செய்கிறோம்! இதை ஏன் தடுக்கிறீர்கள்? இவைகளைச் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்குமே!!
பித்அத் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பது உண்மைதான்; ஆனால் நாங்கள் செய்வது நன்மையான காரியங்களைத்தான்; எனவே இவைகள் பித்அத்துல் ஹஸனா எனப்படும் நற்கருமங்களாகும்
பித்அத்தே கூடாது என்னும் நீங்கள் நபி (ஸல்) அவர்கள் பயன்னடுத்தாத கார், விமானம், பேண்ட் சர்ட் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! அவைகள் பித்அத் இல்லையா?
நன்மையைத்தானே செய்கிறோம்; அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும். ஏனென்றால் அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர் அல்லது கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள். அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன் என்று கருதுவது போலதாகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும். நாம் செய்ய வேண்டிய அனைத்து வகையான அமல்களைப் பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக விளக்கப்பட்டு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது நாம் புதிய அமல்களைச் சேர்ப்பதற்கு வேண்டிய அவசியம் எதற்கு?

"பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்" என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்க நாம் எவ்வாறு பித்அத்துகளை நல்ல பித்அத் என்றும் தீயவை என்றும் தரம் பிரிப்பது?. நமது சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்கும் அறிஞர்களும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாக மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய அமல்களுக்கு ஆதரவு தந்து அவைகள் நடைபெறும் இடங்களுக்கும் சென்று அவற்றில் கலந்து கொள்கின்றனர். உண்மை பேசினால் எதிப்பு வரும், ஆதாயம, வருமானம் தேயும் என அறிந்து சிலர் அசட்டுத் தையத்துடன் மார்க்கத்தில் புதிது புதிதாக உருவானவைகளை பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று பெயரிட்டு அனுமதி வழங்கி ஆதரிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களோ நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்களை வேறுபடுத்திக் காட்ட வில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று தான் சொன்னார்கள்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் மார்க்கத்தை பரிபூரணப்படுத்திவிட்டதாக கூறுகிறானே தவிர இந்த உலக வாழ்க்கை வசதிகளை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்: -

"இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்" (அல் குர்ஆன் 16:8)

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப்படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.

எனவே அவர்கள் எடுத்துவைக்கும் நாம் பயன்படுத்தும் கார், விமானம் போன்றவையும் பித்அத் ஆகாதா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகும். பித்அத் என்பது அமல்களில் புதிதாக உருவாக்குவது தானே தவிர உலக காரியங்களின் நடைமுறைகளில் அல்ல.

எனவே சகோதர சகோதரிகளே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பித்அத்களைப் பற்றி கடுமையாக எச்சரித்திருக்க நாம் மேலே கூறிய மவ்லிது, ஹத்தம், பாத்திஹா போன்ற நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத செயல்களை பித்அத்துல் ஹஸனா என்ற பெயரிலும், நம்முடைய முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்றும் செய்தோமேயானால் அது நிச்சயமாக வழிகேடேயாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் 'நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’

"(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்' ஆதாரம்: அஹ்மத்

"பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல், அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்" அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா

எனவே சகோதர சகோதரிகளே நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கபட்ட இந்த பித்அத்களை நாம் தவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக் கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிம் பிரார்த்திப்போம்.

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம்

"நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்" (அல்குர்ஆன் 3:19)

மேலும் அறிய...

ஏன் இஸ்லாம்?

"இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்" (அல் குர்ஆன் 3:85)

மேலும் அறிய...