Dec 29, 2008

நபி வழி தொழுகை முறை! - For Biginners & new Muslims

வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்: -

அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்த இறைவன் அவனை நாம் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் நமக்கு அவனது திருமறையின் மூலமும் அவனது தூதர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் மூலமாகவும் நமக்கு காட்டியிருக்கிறான். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு ஒரு புதிய வழி முறையைப் பின்பற்றி நாம் அவனை வணங்குவோமேயானால் அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்வதில்லை.

நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்!.

அவைகளாவன: -

1) ஒருவருடைய அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவர் ஈமான் கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டும்
2) எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு செய்ய வேண்டும்
3) எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித் தந்த வழி முறையில் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே இந்த மூன்று நிபந்தனைகளில் எதில் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் அது பரிபூரணமான அமலாக ஆகமாட்டாது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

நபி வழியில் தொழுகையை நிறைவேற்றுவுதன் அவசியம்: -

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் (33:21)

மேலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்’ என்று தொழுகையின் முறை குறித்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார்கள்.

தூய்மை: -

தொழுகையை நிறைவேற்ற உடல், உடை, தொழும் இடம் ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியமாகும். உடலுறவு கொண்டிருத்தாலோ, அல்லது இந்திரியம் வெளியாகி விட்டாலோ குளிப்பது கடமையாகும். குளிப்பு கடமையில்லாத சூழ்நிலைகளில் உளு மட்டும் செய்துவிட்டு தொழவேண்டும். உளூ இல்லாத தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. தண்ணீர் இல்லையென்றாலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் தயம்மும் செய்து கொண்டு தொழ வேண்டும். (பார்க்கவும் : நபி صلى الله عليه وسلم அவர்கள் உளு செய்த முறை)

கடமையான தொழுகை: -

கடமையான தொழுகையை வயது வந்த ஆண் பெண் இருபாலரும கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும். இந்தக் காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலைகளிலும் இந்தத் தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லை. ஏனென்றால் ஒரு முஃமினுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் இடையிலுள்ள வித்தியாசமே தொழுகை தான்.

சுன்னத்தான தொழுகை: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான தொழுகைக்கு முன்னும் பின்னும் உபரியான சில தொழுகைகளைத் தொழுது வந்தார்கள். அந்த தொழுகைகளுக்கு சுன்னத்தான தொழுகை என்று பெயர். இதனை பேணித் தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத் தரும்.

தொழுகையின் எண்ணிக்கைகள் (ரக்அத்துக்கள்): -

பஜ்ர்: - முன் சுன்னத்து - 2 ரக்அத்துக்கள்; பர்லு - 2 கை;அத்துக்கள்

லுஹர்: - முன் சுன்னத்து – 2+2 ரக்அத்துக்கள், பர்லு - 4 ரக்அத்துக்கள், பின் சுன்னத்து - 2 ரக்அத்துக்கள்

அஸர்: - முன் சுன்னத்து - 2 சக்அத்துக்கள், பர்லு - 4 ரக்அத்துக்கள்

மஃரிப்: - பர்லு - 3 ரக்அத்துக்கள், பின் சுன்னத்து - 2 ரக்அத்துக்கள்

இஷா: - பர்லு - 4 ரக்அத்துக்கள், பின் சுன்னத்து - 2 ரக்அத்துக்கள், வித்ர் – 3 ரக்அத்துக்கள்

தொழுகை முறை: -

1) தொழுகைக்காக பாங்கு, இகாமத் கூறவேண்டும். (பார்க்கவும் : பாங்கு, இகாமத் மற்றும் அவற்றுக்கான மறுமொழி கூறுவதன் அவசியம்)
2) கிப்லாவை முன்னோக்குதல்: - கஃபாவின் திசையறிந்து கிப்லாவை முன்னோக்கி நிற்க வேண்டும்

3) நிய்யத் செய்தல்: - தொழப்போகும் நேரத்தொழுகையை மனதில் எண்ணி (வாயால் மொழிவது அல்ல) நிய்யத் செய்து கொள்ள வேண்டும்

4) தக்பீர் கூறுதல்: - இருகைகளையும் இரு புஜங்களுக்கு அல்லது இரு காதுகளுக்கு நேராக உயர்த்தி “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும்

5) நெஞ்சில் கை கட்டுதல்: - கையை உயர்த்தி தக்பீர் கூறியவுடன் வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.

6) ஆரம்ப துஆ ஓதுதல்: - நெஞ்சின் மீது கை கட்டியவுடன் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

“ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரக்ஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க”

7) அவூது பிஸ்மி ஓதுதல் : - “அவுது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்” “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஓதி விட்டு பிறகு சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்.

8.) சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்: - பிறகு சூரத்துல்ஃபாத்திஹா சூராவை ஓதவேண்டும். தனித்து தொழும் தொழுகைகளிலும், இமாம் அமைதியாக ஓதும் பர்லான தொழுகையின் போதும் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டும். ஏனெனில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்கவும் : தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டுமா?)

9) குர்ஆனின் சில வசனங்களை அல்லது சூரா முழுவதையுமோ ஓதுதல்: - சூரா ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் அல்-குர்ஆனின் வசனங்களில் சிலவற்றையோ அல்லது சிறிய சூராக்களையோ ஓதலாம்.

10) ருகூவு செய்தல்: -

குர்ஆனின் வசனங்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.

11) ருகூவில் ஓத வேண்டிய துஆ: - ருகூவில் “ஸுப்ஹான ரப்பியல் அலீம்” என்று மூன்று முறை கூற வேண்டும்.

12) சிறிய நிலை நிற்றல்: - “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா” என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழுந்து நிற்க வேண்டும். பிறகு இரு கைகளையும் புஜத்திற்கு நேராக உயர்த்தி கீழே தொங்கவிட்டவாறு “ரப்பனா லகல்ஹம்து” என்று கூறவேண்டும்.

13) முதல் சுஜூது (ஸஜ்தா) செய்தல்: - பிறகு “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஸுஜுது செய்ய வேண்டும். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜுது அமைந்திட வேண்டும். மேலும் இரு கால்களின் பாதங்களும் நட்டியவாறு இருக்கவேண்டும். உடலோடு ஓட்டவோ அல்லது முழங்கைகளை தரையில் படுமாறும் வகைக்கக் கூடாது.

சுஜூதில் ஓத வேண்டிய துஆ: - ஸுஜுதில், “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” என்று மூன்று முறை கூறவேண்டும்.

14) சிறிய இருப்பு: - பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும். ஸஜ்தாவிலிருந்து எழுந்து இடது கால்களின் மீது உட்கார்ந்து, வலது காலை நட்டி வைத்திருக்க வேண்டும். வலது தொடையின் மீது வலது கையையும் இடது தொடையின் மீது இடது கையையும் முட்டுக்கருகில் கைவிரல்களை விரிக்காமல் இணைத்தவாறு வைக்கவேண்டும்.

இந்த இருப்பில், ரப்பிஃ(க்)ஃபிர்லி என்று இரண்டு முறை கூறவேண்டும்.

15) இரண்டாவது சுஜூது செய்தல்: - பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் செய்ததைப்போன்று மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும்.

16) இரண்டாவது ரக்அத்: - பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து, மீண்டும் நிலைக்கு வரவேண்டும். பிறகு முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே இந்த இரண்டாவது ரக்அத்திலும் செய்ய வேண்டும். அதாவது சூரத்துல்ஃபாத்திஹா ஓதவேண்டும். முதல் ரக்அத்தில் ஓதிய தொழுகையின் ஆரம்ப துஆவை (தனாவை) ஓத வேண்டியதில்லை.

பிறகு சில குர்ஆன் வசனங்களையோ அல்லது சிறிய குர்ஆன் அத்தியாயங்களையோ ஓத வேண்டும்.

பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, சிறிய நிலை நிற்றல் மற்றும் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். இரண்டாவது ரக்அத்தின் ஒவ்வொரு செயல்களிலும் அதாவது ருகூவு, சிறிய நிலை நிற்றல், சஜ்தா மற்றும் சிறிய இருப்பு ஆகிய நிலைகளில் முதல் ரக்அத்தில் ஓதிய அதே துஆக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.

17) இறுதி இருப்பு : - இரண்டாவது ரக்அத்தின் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்த பிறகு, அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்திருந்தது போன்று அமர வேண்டும்.

இந்த அமர்வில் பின் வரும் பிரார்த்தனையை (துஆவை) ஓத வேண்டும்.

அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத் துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.

பின்னர் ஸலவாத்து ஓதவேண்டும்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜீது - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜுது

இதன் பிறகு தான் விரும்பிய பிராத்தனையைக் கேட்டுக் கொள்ளலாம்.

18) தொழுகையை நிறைவு செய்தல்: - பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூற வேண்டும். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூற வேண்டும். இதனுடன் இரண்டு ரக்அத் உடைய தொழுகை நிறைவடையும்.

19) மூன்று அல்லது நான்கு ரக்அத் தொழுகைகள்: -

இரண்டு ரக்அத்களை விட அதிகமான ரக்அத் உள்ள தொழுகைகளைத் தொழும்போது இரண்டாம் ரக்அத்தின் அத்தஹிய்யாத்திற்குப் பின் ஸலாம் கொடுக்காமல் மூன்றாம் ரக்அத்திற்காக எழுந்து நிலைக்கு வந்துவிட வேண்டும். அதில் முதலாவது ரக்அத்தில் கைகளை உயர்த்தியது போன்று கைகளை உயர்த்தி பிறகு கட்டிக்கொள்ள வேண்டும்.

20) இரண்டு ரக்அத்துக்களுக்கும் மேற்பட்ட தொழுகைகளில் மூன்றாவது மற்றும் நான்காவது ரக்அத்துகளில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. குர்ஆன் வசனங்கள் ஓத வேண்டியதில்லை. இறுதி இருப்பில் ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்கவேண்டும்.

21) ஸலாம் கொடுத்த பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளை ஓத வேண்டும். (பார்க்கவும் : தொழுது முடித்தவுடன் ஓத வேண்டிய திக்ருகள்)

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் - இறைவனின் தன்மைகள் : பகுதி 6

அல்லாஹ் கூறுகிறான்: -

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

இறைவனுக்கு ஓய்வு தேவையா?

“…for in six days the LORD made heaven and earth, and on the seventh day he rested, and was refreshed” (Exodus 31:17)

“…ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்..” (யாத்திராகமம் 31:17)

மாட்சிமையும் வல்லமையும் பொருந்தியவனான இறைவனுக்கு களைப்பு ஏற்படுமா? அவனுக்கு ஓய்வு தேவையா? நிச்சயமாக இல்லை! இத்தகைய பலஹீனங்கள் எல்லாம் இறைவனின் படைப்பினங்களுக்கு உரியதாகும். இறைவனை அரி, துயில் எதுவும் கொள்ளாது. அவன் மனிதர்களின் இத்தகைய கற்பனைகளை விட்டும் அப்பாற்பட்டவன்.

இறைவன் அகில உலக மனிதர்களுக்கு நேர்வழிகாட்டிட இறக்கியருளிய சத்திய திருவேதாகிய அல்-குர்ஆனிலே கூறுகிறான்: -

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

இறைவன் தூங்குவானா?

ஆம் இறைவனும் துங்கி பின்னர் விழித்தெழுவார் - பைபிள்!

“அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,” (சங்கீதம் 78:65)

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மனிதர்களின் பலஹீனங்களை விட்டும் தூய்மையானவன்! அவனை அரி, துயில், உறக்கம் போன்ற எதுவும் அவனை பிடிக்காது! - அல்-குர்ஆன்

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன” (அல்-குர்ஆன் 2:225)

இறைவன் நீதி தவறியவனா? அநீதி இழைப்பவனா?

“…எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.” (சங்கீதம் 7:6)

“தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை (யோபு 19:6-7)

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள். (அல்-குர்ஆன் 10:44)

இறைவனின் வல்லமை: -

இறைவனோடு மல்யுத்தம் செய்தவர்: -

“And he said, Your name will no longer be Jacob, but Israel: for in your fight with God and with men you have overcome.” (Genesis 32:28)

அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி வென்றதனால்’ என்றார். (ஆதியாகமம் 32:28)

அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக. (அல்-குர்ஆன் 50:45)

இறைவனை பார்க்க முடியுமா?

பைபிளின் பின்வரும் வசனங்களின் படி தேவனைப் பார்க்க முடியும!

அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30)

பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய், இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின் கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது. (யாத்திராகமம் 24:9-10)

மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக பின்வரும் வசனங்களின் படி தேவனைப் பார்க்க இயலாது!

நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார். (யாத்திராகமம் 33:20)

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (I யோவான் 4:12)

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்-குர்ஆன் 6:103)

இறைவன் உதவி செய்ய இயலாதவனா?

கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன். (சங்கீதம் 39:12)

ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? (சங்கீதம் 39:44:24)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக! (அல்-குர்ஆன் 2:186)

இறைவனைப் பற்றிய வர்ணனைகள்: -

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது. (II சாமுவேல் 22:8-9)

கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார். (II சாமுவேல் 22:11)

இறைவனின் இலக்கணங்கள் குறித்து அல்-குர்ஆன்!

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்-குர்ஆன் 16:74)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்-குர்ஆன் 42:11)

அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்-குர்ஆன் 6:93)

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்-குர்ஆன் 112:1-4)