Jan 18, 2009

பாவமன்னிப்பு தேடல்!

எல்லோரும் தவறு செய்பவர்களே!

‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.

பாவமன்னிப்பு தேடினால் வெற்றியாளராகலாம்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)

கலப்பற்ற மனதோடு பாவமன்னிப்பு தேடினால் சுவனச்சோலை பரிசாக கிட்டும்!

அல்லாஹ் கூறுகிறான்: -

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்-குர்ஆன் 66:8)

நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடிய நபி (ஸல்) அவர்கள்!

‘மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் நூறு முறை பாவமன்னிப்புத் தேடுகிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அஃகர்ரு பின் யஸார் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடினார்கள் என்றால் நாம் எவ்வாறு தேட வேண்டும் என சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவனின் மகிழ்ச்சி!

‘உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் தனது ஒட்டகத்தை தவறவிட்ட பிறகு திடீரென அது கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் அடைகின்ற மகிழ்ச்சியை விட அதிகமாக அல்லாஹ், தனது அடியான் பாவமன்னிப்புத் தேடும் போது மகிழ்ச்சி அடைகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

பாவமன்னிப்பு தேடுவதை தாமதிக்க கூடாது!

‘உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்பு வரை ஒரு அடியானின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் (ரலி)

சூரியன் மேற்கில் உதிக்குமுன்…

‘அல்லாஹ் இரவில் தன் கையை நீட்டுகிறான் பகலில் பாவம் செய்தவர் மன்னிப்பு கேட்பதற்காக. பகலில் தன் கையை நீட்டுகிறான் இரவில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கோருவதற்காக. சூரியன் மேற்கில் உதிக்கும் வரை இவ்வாறு செய்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

தொடர்புடைய ஆக்கம்:

பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?