May 20, 2008

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் : பகுதி 2 – பெண்ணுரிமை

1a) இஸ்லாத்தின் மீது பரப்பப்படும் அவதூறுகள்: -

முஹம்மது நபி (ஸல்) அவர்களால் போதிக்கப்பட்ட தீனுல் இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்தனர், மேலும் இன்றளவும் இணைந்து வருகின்றனர். இதைப் பொறுக்க இயலாத மேலை நாட்டுச் சக்திகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் மேற்கத்திய ஊடகங்களின் உதவியுடன் இஸ்லாத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சேற்றை வாரியிரைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அவர்களால் இஸ்லாத்தின் மீது கூறப்படும் அவதூறுகளில் ஒன்று தான் இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்துகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய காலக்கட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பன்டைய காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவலமானவர்களாகவும், சொத்துரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் போகப்பொருளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், இஸ்லாம் மட்டுமே பெண்களை: -
- கண்ணியப் படுத்தி கௌரவித்தது
- சொத்துரிமை வழங்கியது
- சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.

இஸ்லாத்தைப் பற்றி அவதூறு கூறும் மேலை நாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் காலங்காலமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்பட்டதற்கு தங்களின் புனித வேத நூலான பைபிளில் கூறப்படும் கருத்துக்களே காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். அல்லது மறைத்து விடுகின்றனர்.

கட்டுரையின் இந்தப் பகுதியில் பெண்களின் உரிமைகள் மற்றும் அந்தஸ்து குறித்து பைபிள் மற்றும் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.

1b) முதல் பாவத்திற்கு காரணம் ஒரு பெண்ணே!

பழைய ஏற்பாடு, ஆதியாகமம் , 3 அதிகாரம்

6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

10. அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

11. அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

12. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

13. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

மேற்கண்ட பைபிளின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்: -

1) கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நம்பிக்கையான ‘முதல் பாவத்திற்கு’ ஒரு பெண்ணே காரணம்
2) அந்த பாவத்தின் காரணமாக பெண்கள் பிரசவ வலியினால் அவதியுறுவார்கள் என கடவுளால் தண்டனைக் கொடுக்கப்பட்டனர்.
3) பெண்ணின் பேச்சைக் கேட்டதினால் ஆதாம் (அலை) அவர்கள் தவறிழைத்தார்கள்
4) ஆதாமும் அவருடைய சந்ததியினரும் அவர்களுடைய கணவனின் கட்டளைக்கு அடிபணிந்து கிடக்க வேண்டும்.
5) ஏவாளை ஏமாற்றியதற்காக சர்ப்பம் சாபத்திற்குள்ளாகி தனது வயிற்றால் நகர்ந்து மண்ணைத் தின்கிறது.
6) மனிதர்களுக்கும் சர்ப்பத்திற்கும் பகை ஏற்பட்டு மனிதர்களால் சர்ப்பம் கொல்லப்படுவதற்கும், சர்ப்பம் மனிதர்களின் காலைக் கடிப்பதற்கும் இந்த நிகழ்ச்சியே காரணம்.

இனி, ‘பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது’ என கிறிஸ்தவ மிஷனரிகள் கூறுகின்ற அல்-குர்ஆன்’ இந்த நிகழ்ச்சி குறித்து என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.

அல்-குர்ஆன் அத்தியாயம் 7, ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)

7:19 (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) ‘ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்’ (என்று அல்லாஹ் கூறினான்).

7:20 எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, ‘அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை’ என்று கூறினான்.

7:21 ‘நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்’ என்று சத்தியம் செய்து கூறினான்.

7:22 இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: ‘உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?’ என்று கேட்டான்.

7:23 அதற்கு அவர்கள்: ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’ என்று கூறினார்கள்.

7:24 (அதற்கு இறைவன், ‘இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு’ என்று கூறினான்.

7:25 ‘அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்’ என்றும் கூறினான்.

மேற்கண்ட அல்-குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்: -

1) ஷைத்தான் ஆதாம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) அவர்கள் இருவரையுமே ஏமாற்றினான். பைபிள் கூறியது போன்று ஹவ்வா (அலை) அவர்கள் தான் தவறிழைத்தற்கு முதற் காரணமல்ல.
2) பைபிளில் கூறப்பட்ட தண்டணைகளான ‘பெண்களுக்குப் பிரசவ வலி’, ‘பெண்கள் புருஷன் மார்கள் பெண்களை ஆண்டு கொள்ளுவான்’, பாம்பு மண்ணைத் தின்கிறது போன்ற அபத்தங்கள், பெண்களை இழிவு படுத்தும் வாசங்கள் அல்-குர்ஆனில் இடம் பெறவில்லை.

கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் சிந்தனைக்காக சில கேள்விகள்: -

1) பெண்கள் தான் ஏவாளின் தவறுக்காக பிரசவ வலியால் அவதிப்படுகிறார்கள் என்றால் மற்ற உயிரினங்கள் அனைத்தும் என்ன பாவத்திற்காக பிரசவத்தின் போது அவதிப்படுகின்றன?

2) ஏவாள் செய்த தவறுக்கு தற்காலத்தில் வாழும் பெண்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

3) பெண்கள் தமது கணவனின் அடிமைகளா? அவர்களுக்கென்று உணர்ச்சிகளில்லையா?

4) சர்ப்பம் மட்டும் தானா தனது வயிற்றால் ஊர்கின்றது? ஊர்வனவற்றில் மற்ற எந்தப் உயிரினங்களும் தனது வயிற்றால் ஊர்வதில்லையா? மேலும் சர்ப்பம் மண்ணைத் தான் தின்கின்றதா?

தயவு செய்து சிந்தித்து விடை காண முன்வாருங்கள்.